

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் பாரதி வளவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சரவணன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் குமரி அனந்தன் கோரிக்கை நிறைவுரை ஆற்றினார்.
கரோனா பாதித்து உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் அறிவித்தபடி ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலை உடனே வெளியிட்டு காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வுக்கு அவசியமான அடிப்படை பயிற்சிகளை உரிய காலத்தில் மாவட்ட அளவில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.