Published : 30 Sep 2021 07:46 AM
Last Updated : 30 Sep 2021 07:46 AM

தூத்துக்குடி கடலில் தனியாக நின்ற பைபர் படகு : மீனவர்கள் மீட்டனர்: போலீஸார் விசாரணை

தூத்துக்குடி

தூத்துக்குடி திரேஸ்புரம் கடல் பகுதியில் தனியாக நின்ற பைபர் படகை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கைக்கு, தூத்துக்குடி மாவட்டம் வழியாக பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து உள்ளது. அதேபோன்று, ஆட்கள் கடத்தல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால், உளவுப்பிரிவு போலீஸார், கடலோர காவல்படை மற்றும் கடலோர பாதுகாப்பு போலீஸார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆனாலும், கடத்தல் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் நேற்று கடலுக்கு சென்றுவிட்டு கரைக்கு திரும்பி வந்தனர். அப்போது, கடலுக்குள் ஒரு பைபர் படகு ஆட்கள் யாருமின்றி மிதந்து கொண்டு இருந்தது. மீனவர்கள் அந்த படகை மீட்டு திரேஸ்புரம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இத்தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீஸார் மற்றும் உளவுப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

குலாப் புயல் எதிரொலியாக கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால், கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகு, கடலுக்குள் இழுத்து வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும், அந்த படகின் எண் அழிக்கப்பட்டுள்ளது. இதனால், படகு உரிமையாளரை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x