உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விட்ட - பொன்னங்குப்பம் ஊராட்சியில் போட்டி வேட்பாளர்கள் :

உள்ளாட்சிப் பதவிகளை  ஏலம் விட்ட -  பொன்னங்குப்பம் ஊராட்சியில் போட்டி வேட்பாளர்கள் :
Updated on
1 min read

உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விட்ட பொன்னங்குப்பம் ஊராட்சியில் போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னங்குப்பம் ஊராட்சியில் துணை கிராமமாக துத்திப்பட்டு உள்ளது. கடந்த 15-ம் தேதி இப்பகுதியில் இருந்து, ஊராட்சியின் தலைவர் பதவியை ரூ. 13 லட்சத்திற்கு ஏலம் விட்டதாக தகவல் வெளியானது.

மேலும் அதே நாளில் துத்திப்பட்டில் உள்ள 1 முதல் 6 வது வார்டு ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகள் முறையே ரூ. 30 ஆயிரம் வரை ஏலம் போனதாக கூறப்பட்டது. இந்நிலையில் 19-ம் தேதி அதிகாலை ஒன்றிய கவுன்சிலர் பதவியும் ரூ 20 லட்சத்து 8 ஆயிரத்து 100க்கு ஏலம் விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் துத்திப்பட்டு கிராமத்தில் குறிப்பிட்ட சமூக மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனக் கூறி தலைவர் பதவிக்கு ஏலம் எடுத்தவரை எதிர்த்து மேலும்ஒருவர் வேட்பாளாராக போட்டியிடுகிறார். இதே போல ஏலம் விடப்பட்டஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்குமேலும் 2 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு ஒருவர் போட்டி வேட்பாளராகவும், 3 வது வார்டுக்கு 2 பேர் போட்டி வேட்பாளராகவும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 2,4,5, 6 வார்டுகளின் ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு முதலில் மனுத்தாக்கல் செய்தவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. 7,8,9 வார்டுகளின் உறுப்பினர்கள் பதவிக்கு சிலர் மனு தாக்கல் செய்து, பின்னர் திரும்ப பெற்றதால், அப்பதவிகளுக்கு யாரும் போட்டியிடவில்லை.

இந்தச் சிக்கல்களுக்கு மத்தியில் பொன்னங்குப்பம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in