Published : 28 Sep 2021 03:20 AM
Last Updated : 28 Sep 2021 03:20 AM

வீரபாண்டி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய - லஞ்சம் வாங்கிய விஏஓ உட்பட 2 பேர் கைது :

வீரபாண்டி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரத்து 500 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.

வீரபாண்டி அடுத்த பெத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் தனது தாத்தா பெயரில் இருந்த நிலத்தை தனது தந்தை பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய பெத்தாம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி மற்றும் உதவியாளர் உதயகுமார் ஆகியோர் ரூ.3 ஆயிரத்து 500 லஞ்சம் கேட்பதாக, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் செல்வகுமார் புகார் செய்தார். இதையடுத்து, செல்வகுமார் லஞ்சமாக கொடுத்த 3 ஆயிரத்து 500 ரூபாயை கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி மற்றும் உதவியாளர் உதயகுமார் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிகுமார் தலைமையிலான போலீஸார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

சார்பதிவாளர் அலுவலத்தில் சோதனை

சேலம் சூரமங்கலம் மேற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அலுவலக கதவுகள் அனைத்தையும் மூடினர். இதில், முதல்கட்டமாக, கணக்கில் வராத பணம் , முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x