Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரத்து 92 கனஅடியாக குறைந்தது. எனினும், அணையின் நீர்மட்டம் 73.69 அடியாக நீடித்து வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்துள்ள மழை காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து, விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி மட்டுமே நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கடந்த சில நாட்களாக சரிவடைந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9 ஆயிரத்து 561 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரத்து 92 கனஅடியாகக் குறைந்தது.
டெல்டா பாசனத்துக்கு குறைந்த அளவே நீர் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறையாமல் உள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 73.68 அடியாக இருந்த நிலையில், நேற்று நீர்மட்டம் 73.69 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 35.95 டிஎம்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT