Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் - இன்று 3-ம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் :

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3-ம் கட்ட தடுப்பூசி முகாம் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசும் ஆட்சியர் பா.முருகேஷ்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3-வது கட்ட கரோனா தடுப்பூசி முகாம் குறித்த ஆய்வு கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமாக, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் உத்தரவுப்படி, முதற்கட்ட சிறப்பு முகாம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. அப்போது 1,04,325 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர், கடந்த 19-ம் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட சிறப்பு முகாமில் 77,085 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, 3-ம் கட்ட சிறப்பு முகாம் 26-ம் தேதி (இன்று) நடைபெற வுள்ளது. இதையொட்டி, மருத்துவத் துறை மூலமாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தி.மலை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளவர்கள் மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் ஆகியோர் 3-ம் கட்ட சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து குமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x