Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி - பணம் பறிக்க முயன்றவரிடம் விசாரணை :

மேட்டூர் அடுத்த காவிரிபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (25). இவர் பிளஸ் 2 முடித்து விட்டு மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடத்துக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்னர் செல்போனில் பாலசுப்பிரமணியத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் மின்வாரியத்தில் கேங்மேன் பணி வாங்கித் தருவதாகவும், அதற்காக ரூ.2.50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று (23-ம் தேதி) காலை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் 4 பேருடன் சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே வரச்சொல்லி பாலசுப்பிரமணி மற்றும் அவரது உறவினர்களை சந்தித்துள்ளார். மேலும், முதல்கட்டமாக ரூ.58,600 கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். சந்தேகம் அடைந்த பாலசுப்பிரமணி ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்ற போலீஸாரிடம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த நபர்களை பிடிக்க முயன்றபோது, ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற 3 பேர் அங்கிருந்து தப்பினர். பிடிபட்டவரை டவுன் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் என்பதும், வேலை வாங்கி கொடுப்பதாக பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x