ராமநாதபுரத்தில் மகனை மீட்டுத் தரக்கோரி ஆட்சியர் முன் தீக்குளிக்க முயன்ற பெண் :

ராமநாதபுரத்தில் மகனை மீட்டுத் தரக்கோரி ஆட்சியர் முன் தீக்குளிக்க முயன்ற பெண் :
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் அருகே சித்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகபாண்டி. இவரது மனைவி முனீஸ்வரி(27). இவர்களுக்கு கரன்(6) என்ற மகன் உள்ளார். குடும்பப் பிரச்சினையால் கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர். முனீஸ்வரி தனது மகனுடன், தாய் வீட்டில் வசித்தார். கடந்த மாதம் பஞ்சாயத்து மூலம் மகனை நாகபாண்டி தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். அதனையடுத்து மகனை தன்னுடன் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என முனீஸ்வரி, ராமநாதபுரம் மகளிர் காவல்நிலையம், பஜார் காவல்நிலையம், மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்தார்.

போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நேற்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா காரில் இருந்து இறங்கும்போது, முனீஸ்வரி தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக ஆட்சியரின் ஓட்டுநர் ராமச்சந்திரன், நேர்முக எழுத்தர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் முனீஸ்வரியை தடுத்து நிறுத்தினர். அதனையடுத்து முனீஸ்வரியிடம் ஆட்சியர் விசாரித்தார். பின்னர் மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in