Published : 21 Sep 2021 03:21 AM
Last Updated : 21 Sep 2021 03:21 AM

பெட்ரோல் விலை உயர்வு, வேளாண் சட்டங்களைக் கண்டித்து - திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் :

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் வண்ணார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி/ கோவில்பட்டி/ நாகர்கோவில்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கும் முடிவு போன்றவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் நேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மகாராஜ நகரிலுள்ள கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் வண்ணார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் மு.அப்துல்வகாப் எம்எல்ஏ தலைமை வகித்தார். கைலாசபுரத்திலுள்ள தளபதி படிப்பகம் முன் மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள் தலைமையிலும், வி.எம். சத்திரத்தில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், தாழையூத்தில் கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுபோல காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி சட்டப் பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையிலும், மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் கட்சி, தமுமுக சார்பில் மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் தங்கள் வீடுகளின் முன்பு கோரிக்கைஅட்டைகளை பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் சிவ பத்மநாதன், செல்லத்துரை, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பழனி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் புதுக்கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலாளர் டி.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மதிமுக சார்பில் தூத்துக்குடி கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட அவைத் தலைவர் தர்மர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா ஆகியோரது வீட்டு முன்புஅவர்களது தலைமையிலும், எட்டயபுரத்தில் நகர திமுக செயலாளர் பாரதி கணேசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டியில் நகர திமுக செயலாளர் கருணாநிதி, ஒன்றிய அலுவலகம் முன்புதிமுக செயலாளர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி காந்தி மண்டபம் முன்பு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ், மதிமுக மாவட்ட அலுவலகம் முன்பு வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்

கருங்கல் தபால் நிலையம் முன்பு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் அருகே கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன், மேலகிருஷ்ணன்புதூர் அருகே முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்த்தாண்டம், குழித்துறை, திருவட்டாறு, கொட்டாரம், தோவாளை உட்பட மாவட்டத்தில் பரவலாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x