Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

திருப்பூர் அணைப்பாளையத்தில் - இந்து அமைப்பு நிர்வாகிக்கு வெட்டு : இளைஞர்கள் 2 பேர் கைது

இந்து அமைப்பு நிர்வாகியை வெட்டியதாக, திருப்பூரில் இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் கல்லூரி சாலை அணைப் பாளையத்தை சேர்ந்தவர் காந்த் (42). இவர் அப்பகுதியில் பனியன் பிரிண்டிங் பட்டறை வைத்துள்ளார். இந்து முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, பிரிண்டிங் பட்டறை அருகே உள்ள காலி இடத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்தியதாக தெரிகிறது. இதனை காந்த் தட்டிக்கேட்டதால், வாய்த்தகராறு எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று பிரிண்டிங் பட்டறையில் காந்த் இருந்தபோது, உள்ளே புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் வந்து அவரை சரமாரியாக வெட்டியது. நிறுவனத்தின் வெளியில் இருந்த குப்பைமேட்டில் அவரை தள்ளிவிட்டு, அங்கிருந்து மர்மகும்பல் தப்பியது.அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர். இதில், பிரிண்டிங் பட்டறை அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த கும்பல், காந்த்தை வெட்டியது தெரியவந்தது.

இதையடுத்து திருப்பூர் சாமுண்டி புரம் ஆர்ஜிபி கிடங்கு வீதியை சேர்ந்தநாகராஜ் (22), மளிகைக் கடைக்காரர் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த சக்திவேல் (24) ஆகியோரை நேற்று போலீஸார் கைது செய்தனர். சம்பவத்தின் போதுலேசான காயமடைந்த முனீஸ், திருப்பூர்அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரவீனை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x