Published : 18 Sep 2021 03:14 AM
Last Updated : 18 Sep 2021 03:14 AM
மதுரையை சேர்ந்த ஜானகி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) சார்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் பணித் தேர்வு தொடர்பாக ஆகஸ்ட் 25-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆன்லைன் மூலம் ஒரு முறை பதிவு செய்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள எண்ணைக் கொண்டு அனைத்து தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம்.
அரசு குற்றவியல் வழக்கறிஞர் நியமனத் தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்க முயன்றால், விண்ணப்பதாரரின் ஆதார் எண் கேட்கிறது. ஆதார் எண் கொடுக்காவிட்டால் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப் பிக்க முடியாத நிலை உள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு எழுதவும் ஆதார் எண் கட்டாயம் இல்லை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப் பாணையை செயல்படுத்த இடைக் காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், டிஎன்பிஎஸ்சி ஒரு முறை பதிவில் ஆதார் எண் பதிவு செய்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை பதிவேற்றம் ஆகவில்லை. ஒரு வாரத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் நியமன தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி முடிகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனு தொடர்பாக டிஎன்பிஎஸ்சியிடம் உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை செப். 23-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT