Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

2 பேர் கொலை தொடர்பாக 14 பேர் கைது - மோதலைக் கைவிடுமாறு கிராமத்தினரிடம் எஸ்பி வேண்டுகோள் :

திருநெல்வேலி அருகே கோபாலசமுத்திரத்தில் பொதுமக்களை சந்தித்து பேசும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன்.

திருநெல்வேலி

சேரன்மகாதேவி அருகே அடுத்தடுத்து 2 பேர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மோதல்போக்கை கைவிடுமாறு கிராம மக்களிடம் எஸ்பி வேண்டுகோள் விடுத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் போலீஸ் சரகம் கீழச்செவல் நயினார்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சங்கர சுப்பிரமணியன் (37) என்பவர் கடந்த 13-ம் தேதி வடுவூர்பட்டி டாஸ்மாக் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய, சேரன்மகாதேவி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இத் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொத்தன்குளம் மந்திரம் மகன் மகாராஜா (20), கணபதி மகன் பிரபாகரன் (26), ரத்தினசாமி மகன் அரவிந்த், அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற தீயான், பாண்டி (31), திருநெல்வேலி டவுன் பாறையடியைச் சேர்ந்த தாசன் மகன் சீதாராமகிருஷ்ணன் (24) ஆகியோரை கைது செய்துள்ளனர். இதுபோல், கோபாலசமுத்திரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (37) என்பவர் கடந்த 15-ம் தேதி அடையாளம் தெரியாத கும்பலால், செங்குளம் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேலச்செவலை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவா (23), முருகன் மகன் சிவா (24), கீழச்செவலை சேர்ந்த சங்கர் மகன் பேச்சிமுத்து (20), பிராஞ்சேரி பெரியதுரை மகன் வேல்முருகன் (28), முருகன் மகன் மாடசாமி (25), குணசேகரன் மகன் சுரேஷ், கண்ணன் மகன் மகேஷ் ராஜா (24), கீழச்செவல் செல்லக்குட்டி மகன் ஐயப்பன் (20) ஆகியோரை கைது செய்தனர்.

எஸ்.பி. அறிவுரை

இதனிடையே, பிராஞ்சேரி, கோபாலசமுத்திரம், கொத்தமங்கலம், மேலச்செவல், கீழச்செவல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மாவட்ட எஸ்பி மணிவண்ணன் நேற்று நேரில் சென்று, பொதுமக்களை சந்தித்து, மோதல் போக்கை கைவிடுமாறு அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x