Published : 16 Sep 2021 03:14 AM
Last Updated : 16 Sep 2021 03:14 AM

கடையநல்லூர் அருகே - ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் : விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்

கடையநல்லூர் அருகே ஒச்சாநடை பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்.

தென்காசி

கடையநல்லூர் அருகே நேற்று மீண்டும் 4 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் அவை அங்கிருந்து விரட்டப்ப ட்டன. யானைகள் தொடர்ந்து ஊருக்குள் வருவதால் விவசாயி கள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், கடைய நல்லூர் அருகே வடகரையைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக காட்டு யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களில் புகுந்து மா, தென்னை, வாழை, நெல் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள தண்ணீர் குழாய்கள், வேலிகள் போன்றவற்றை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த மாதம் வடகரையில் 2 யானைகள் புகுந்தன. நூற்றுக்கணக்கானோர் திரண்டு அவற்றை விரட்டினர்.

பட்டாசு வெடித்தனர்

இந்நிலையில், நேற்று காலையில் வடகரையில் இருந்து அடவிநயினார் அணைக்குச் செல்லும் ஒச்சாநடை பகுதியில் 4 காட்டு யானைகள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தின. இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் திரண்டு பட்டாசு களை வெடித்து யானைகளை விரட்ட முயன்றனர். மெயின் ரோடு பகுதியில் அடிக்கடி யானைகள் குறுக்கிட்டதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் யானைகள் அங்கிருந்து விரட்டப் பட்டன.

இதுகுறித்து விவசாயி ஜாகிர் உசேன் கூறும்போது, “வடகரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேல் யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 15 தென்னைகள், ஆயிரம் வாழைகள், 2 ஏக்கர் நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறைக்கு புகார்கள் கூறியும் யானைகளை நிரந்தரமாக காட்டுக்குள் விரட்ட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுவரை பயிர்கள் மட்டுமே சேதமடைந்த நிலையில் தற்போது உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. யானைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகளைத் திரட்டி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x