Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM

கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக - குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் : வரும் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது

தேசிய குடற்புழு நீக்க திட்டமானது 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாத இடைவெளியில் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்று வருகிறது.

இதன்படி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி ஆகியோர் நேற்று வழங்கினர்.

கடலூர் திருப்பாதிரிபுலியூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் முதற்கட்டமாக நேற்று முதல் வரும் 18-ம் தேதி வரை நடைபெறகிறது. 2-ம் கட்டமாக வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று தொடக்கி வைத்தார். அப்போது ஆட்சியர் கூறியது:

கடலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 526 குழந்தைகளும், நகர்ப்புறங்களில் 1லட்சத்து 20 ஆயிரத்து 358 குழந்தைகளும் மொத்தம் 6 லட்சத்து 884 குழந்தைகள் மற்றும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 699 பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்.

இதில் 1 முதல் 19வயதிலான அனைவருக்கும், 20 வயது முதல் 30 வயதிலான பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல்) ஒரே நாளில் அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.

1 முதல் 2 வயது வரை அரை மாத்திரையும், 2 முதல் 30 வயது வரை 1 மாத்திரையும் எடுத்துக் கொள்ளவேண்டும். என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x