ரூ.1.20 லட்சம் நூதன திருட்டு: இன்ஜி. மாணவர் கைது :

ரூ.1.20 லட்சம் நூதன திருட்டு: இன்ஜி. மாணவர் கைது :
Updated on
1 min read

சேலத்தில் பால்வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.20 லட்சம் திருடிய பொறியியல் பட்டதாரி மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் தாசநாயக்கன்பட்டி சின்னையபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பால் வியாபாரி கணேசன் (52). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பணம் எடுக்க ஏடிஎம் மையத்துக்குச் சென்றார். அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என தகவல் வந்தது.

அதிர்ச்சி அடைந்த கணேசன், இதுகுறித்து வங்கியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.20 லட்சத்தை மர்ம நபர் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து கணேசன் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.

போலீஸார் விசாரணை நடத்தியதில், கணேசனின் மகன் பொறியியல் பட்டப்படிப்பில் சேர ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டி, வீட்டு அருகே வசித்து வரும் பொறியியல் படித்து வரும் மாணவர் ராகுல்ரிஷி (20) என்பவரிடம் அணுகியுள்ளார். அப்போது, கணேசனின் ஏடிஎம் கார்டு நம்பர், ரகசிய குறியீடு எண்களை அறிந்து கொண்ட ராகுல்ரிஷி, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.20 லட்சம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் ராகுல்ரிஷியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in