Published : 07 Sep 2021 03:15 AM
Last Updated : 07 Sep 2021 03:15 AM

மீண்டும் பணிவாய்ப்பு கேட்டு மக்கள் நலப்பணியாளர்கள் மனு :

தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் கள் சங்கத்தினர் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

கடந்த 10 ஆண்டுகளாக பணி இழந்து, மீண்டும் பணிக்காக காத்திருக்கும் 13,500 மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் நியமிக்க வேண்டும். ஊதிய உயர்வுடன்பணி நியமனம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த கால பணிநியமன அரசாணையை ரத்து செய்து, புதிதாக பணிநியமனஅரசாணை வெளியிட வேண்டும்.2011-ல் பணி நீக்கம் காரணமாக வறுமையால் இறந்த, தற்கொலை செய்துகொண்ட மக்கள்நலப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்டியார்பட்டி குறிஞ்சி நகர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் அளித்த மனுவில், “ரெட்டியார்பட்டி குறிஞ்சிநகர் கடந்த 2000-ம் ஆண்டு முதல் குடியிருப்பு பகுதியாக இருக்கிறது. வீடுகள் கட்டி 2005 முதல் இங்கு மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இப்பகுதியில் சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதி செய்துதர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆஷா பணியாளர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், “அம்பாசமுத்திரம் வட்டம் வைராவிகுளம், மன்னார்கோவில், அம்பாசமுத்திரம், அகஸ்தியர்பட்டி பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார பணியாளர்களாக பணியாற்றும் ஆஷா பணியாளர்கள், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து சுகாதார, மருத்துவ திட்டங்களையும் கிராமப்புறங்களில் அமல்படுத்துவதில் முழுவீச்சில் பணியாற்றுகின்றனர். ஆனால், பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கிராமப்புறங்களில் இவர்களே பணியாற்றுகின்றனர். இவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மாதம் ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் மாவட்ட துணைத்தலைவர் மைதீன் தலைமையில் அளித்த மனுவில், “திருநெல்வேலியிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள அனைவருக்கும் அபார்ட்மென்ட் வீடு திட்டத்தின் கீழ், அடுக்குமாடி குடியிருப்பில் விரைவாக வீடு வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

களக்காடு பகுதியைச் சேர்ந்த மேகலா என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் உருண்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். தங்களது நிலத்தை சிலர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்துள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்து மக்கள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சடகோபன், மாவட்ட தலைவர் உடையார் உள்ளிட்டோர் விநாயகர் சிலையுடன் வந்து அளித்த மனுவில், “புதுச்சேரி, மகாராஷ்டிரா மாநிலங்களைப்போல தமிழக அரசும் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும். வரும் 10-ம் தேதி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யவும், 14-ம் தேதி தாமிரபரணி ஆற்றில் சிலைகளை விஜர்சனம் செய்யவும் அனு மதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

மனிதநேய ஜனநாயக கட்சியினர் அளித்த மனுவில், “திருநெல்வேலி டவுனில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x