விருதுநகர் மாவட்டத்தில் சாலை பணிகள் தாமதம் ஏன்? : அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கேள்வி

விருதுநகர் மாவட்டத்தில் சாலை பணிகள் தாமதம் ஏன்? :  அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கேள்வி
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் தாமத மடைந்து வரும் 53 சாலைப் பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி மற்றும் ஒன்றிய அலுவலர்களிடம் விளக்கம் கேட்ட அமைச்சர்கள், அப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினர்.

விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் சீனிவாசன், ரகுராமன், ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி ஒன்றியங்களில் 53 சாலைப் பணிகள் முடிக்கப்படாமல் இருப்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். கனிம வளம் உள்ள பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாதது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், ஒப்பந்ததாரர்கள் தாமதம் செய்து வருகின்றனர் என்றனர்.

அமைச்சர்கள் பேசுகையில், அதிகாரிகள் பணி நடக்கும் இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றனர்.

முன்னதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்கக் கூட்டணியின் விருதுநகர் மாவட்டக் கிளை சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in