Published : 02 Sep 2021 03:14 AM
Last Updated : 02 Sep 2021 03:14 AM

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது :

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து குறைந்த நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 440 கன அடியாகக் குறைந்துள்ளது.

பவானிசாகர் அணையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, இம்மாதம் 102 அடி வரை மட்டுமே நீரினைத் தேக்கி வைக்க முடியும். அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், அணைக்கான நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர் மட்டம் இரு நாட்களுக்கு முன்னர் 102 அடியை எட்டியது. இதனால், பவானி ஆற்றில் சராசரியாக விநாடிக்கு 2500 கனஅடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை முதல் விநாடிக்கு 1000 கனஅடியாகக் குறைந்தது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1014 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடியும், பவானி ஆற்றில் உபரி நீராக விநாடிக்கு 440 கனஅடியும் திறக்கப்படுகிறது.

ஈரோட்டில் மழை

ஈரோடு மாவட்ட புறநகர் பகுதிகளான வரட்டுப்பள்ளம், அம்மாபேட்டை, குண்டேரிப்பள்ளம், கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ): வரட்டுப்பள்ளம் - 60, அம்மாப்பேட்டை - 51.2, குண்டேரிப்பள்ளம் - 28.2, கொடுமுடி - 26.4, பவானிசாகர் - 13.2, கொடிவேரி - 9.3, சத்தியமங்கலம்-7.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x