

ஆத்தூர் அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆத்தூர் அடுத்த பைத்தூர் ஊராட்சியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 7-வது வார்டு நைனார்பாளையம் பகுதி மக்கள் தங்களுக்கு 100 நாள் வேலை மற்றும் குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, தவளப்பட்டியில் இருந்து ஆத்தூர் நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஆத்தூர் ஊரக போலீஸார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.