Published : 30 Aug 2021 03:15 AM
Last Updated : 30 Aug 2021 03:15 AM

ஈரோட்டில் 14 ஒன்றியங்களில் ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி :

ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சிப் பள்ளியில் நேற்று நடந்த முகாமில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வரிசையில் நின்றிருந்த ஆசிரியர்கள்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும், பள்ளி ஆசிரியர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.

மாநிலம் முழுவதும் வரும் 1-ம் தேதி முதல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 403 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் நேரடியாகத் தொடங்கவுள்ளது.

இதையொட்டி, பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8,904 ஆசிரியர்கள், பணியாளர்களில், 6,028 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 3,619 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 2876 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, மாவட்ட அளவில்14 ஒன்றியங்களிலும், நேற்று கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி முகாம், ரயில்வே காலனி மாநகராட்சிப் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், ஆசிரியர்கள் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இதேபோல், 13 ஒன்றியங்களிலும் ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் இதனை ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x