

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஆத்தூர் ஆனைவாரி முட்டல் அருவி உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்கள் நேற்று திறக்கப்பட்டன. ஏற்காட்டில் இன்று (26-ம் தேதி) பூங்காக்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலாத் தலங்களை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, 4 மாத இடைவெளிக்குப் பின்னர் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா நேற்று திறக்கப்பட்டது.
உயிரியல் பூங்கா இயக்குநர் சுப்ரமணி முன்னிலையில், உயிரியல் பூங்கா ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல, ஆத்தூர் அடுத்த ஆனைவாரி முட்டல் அருவி, ஏற்காடு மான் பூங்கா, கரடியூர் சூழல் சுற்றுலா மையம் போன்றவற்றிலும் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, ஏற்காடு தோட்டக்கலைத் துறை பூங்காக்கள் இன்று (26-ம் தேதி) மீண்டும் திறக்கப்படுகின்றன. குறிப்பாக, அண்ணா பூங்கா, ஏரிப்பூங்கா, ரோஜா பூங்கா, ஐந்திணைப் பூங்கா, இரண்டு தாவரவியல் பூங்காக்கள் என 6 பூங்காக்களும் இன்று திறக்கப்படுகிறது.