

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (23-ம் தேதி) நடைபெறவுள்ளது, என கல்லூரி முதல்வர் ரகுபதி (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021-2022-ம் கல்வியாண்டிற்கு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய இளநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (23-ம் தேதி) நடைபெற உள்ளது.
கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் கல்லூரியின் இணைய தளம் மற்றும் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இணைய வழியில் பதிவு செய்த மாணவர்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தந்து கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.