Published : 23 Aug 2021 03:14 AM
Last Updated : 23 Aug 2021 03:14 AM

சத்தியில் அரசு அனுமதி பெறாமல் - குழந்தைகள் காப்பகம் நடத்தியவர் கைது :

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே உரிய அனுமதி பெறாமல் குழந்தைகள் காப்பகம் நடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புதுவடவள்ளியில், ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து 18 வயதிற்குட்பட்ட 6 பள்ளி மாணவர்களை, கீழக்கரை (27)என்பவர் தங்க வைத்துள்ளார். மாவட்ட நிர்வாகத்திடம் எவ்வித அனுமதியும் பெறாமல், குழந்தைகள் இல்லம் போல் அவர் இதனை நடத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியாதேவியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தை நல குழு உறுப்பினர் கர்ணன் காமராஜ், உளவியலாளர் ஜெயப்பிரகாஷ், அரசு மனநல மருத்துவர் சண்முகவடிவு, விழுதுகள் அமைப்பின் இயக்குநர் தங்கவேல் ஆகியோர் நடத்திய ஆய்வில், உரிய அனுமதி பெறாமல் குழந்தைகள் காப்பகம் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு தங்கியிருந்த 6 குழந்தைகளும் மீட்கப்பட்டு, அரசு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இது குறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, இளைஞர் நீதிச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் கீழக்கரை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x