Published : 22 Aug 2021 03:15 AM
Last Updated : 22 Aug 2021 03:15 AM

காணி பழங்குடி மாணவர்கள் தூத்துக்குடி துறைமுகத்தை பார்வை :

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காணி பழங்குடியினத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் தூத்துக்குடி துறைமுகத்தை பார்வையிட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களை ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆகியவை வனத்துறையுடன் இணைந்து பல்வேறு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மைலாறு, சேர்வலாறு, அகஸ்தியர் குடியிருப்பு காணி பழங்குடியினத்தை சேர்ந்த மாணவ, மாணவியரை சீருடைப் பணி, வனப்பணி, வங்கிப் பணி போன்ற இதரப் பணிகளில் சேர்க்கும் பொருட்டு இலவச பயிற்சி வகுப்புகள் முண்டந்துறை வன அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு பேருந்து வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவர்கள் அரசு அலுவலகங்களை பார்வையிட்டு ஊக்கம் பெறவும் தன்னம்பிக்கை வளர்த்து கொள்ளவும் அரசு அலுவலக செயல்பாடுகள், அதன் பணி இயல்பு போன்றவற்றை கண்டுணர்ந்து அவர்கள் அப்பணியில் சேர ஆர்வத்தை உருவாக்கவும், பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு 32 மாணவ, மாணவியர் மற்றும் பயிற்றுநர்கள் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தால் அழைத்து செல்லப்பட்டனர். துறைமுகத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் செயல்பாடுகள், கப்பல் போக்குவரத்து மற்றும் கப்பல் கட்டுமான துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து துறைமுக அதிகாரிகள் அவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து இரண்டு சிறிய கப்பல்களில் மாணவர்கள் பயணம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் தாங்கள் முதல் முறையாக கடலை கண்டதாகவும், கப்பல் பயணம் தங்களுக்கு முதல் முறை எனவும், இப்பயணம் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாகவும் தெரிவித்தனர். தூத்துக்குடி துறைமுக துணை பாதுகாவலர் கேப்டன் பிரவீன்குமார் சிங், துறைமுக மக்கள் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.சசிராஜ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் அ.ஜோதிமணி , உதவி இயக்குநர் ம.மரிய சகாய ஆன்டனி, வனத்துறை அதிகாரிகள் எஸ்.மோகன்தாஸ், அ.அப்துல் ரகுமான், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மார்த்தாண்ட பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x