Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM

செஞ்சியில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை திறப்பு :

செஞ்சியில்ரூ.14 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையை அமைச்சர் மஸ்தான் நேற்று திறந்து வைத்தார்.

உழவர் சந்தையில் விற்பனை செய்ய 15 விவசாயிகளுக்கு அடையாள அட்டையினை அமைச்சர் மஸ்தான் வழங்கினார். வேளாண் துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக மானியத்துடன் 30 நபர்களுக்கு ரூ.1,25,714 மதிப்பில் மழைத்தூவான் கருவி, தெளிப்பு நீர் பாசன கருவி, உளுந்து விதை மற்றும் உயிர் உரம், கோணாவீடர் மற்றும் பேக்ட் ஆர்கானிக் உரம் மற்றும் திரவ நானோ யூரியா உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். தோட்டக்கலைத்துறை சார்பாக மானியத்துடன் 10 நபர்களுக்கு ரூ.6,64,500 மதிப்பில் நிழல் வலை குடில் பணி ஆணை, சிப்பம் கட்டும் அறை மற்றும் சின்ன வெங்காயம் விதை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது அவர் பேசியது:

தமிழக அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையினை அறிமுகப்படுத்தி விவசாயிகளின் நலனை காத்திடும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு உழவர் சந்தை வாயிலாக உறுதுணையாக உள்ளது என்றார்.

ஆட்சியர் மோகன், வேளாண் துறை இணை இயக்குநர் ரமணன், துணை இயக்குநர் கண்ணகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி, முன்னாள் எம்எல்ஏ செந்தமிழ் செல்வன், திமுக நகர செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x