Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM
சேலம்: சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நகருக்குள் வனம் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்துக்கு உட்பட்ட பி.கே.எஸ். நகரில் நகருக்குள் வனம் அமைப்பதற்காக 21 ஆயிரம் சதுரடி பரப்பளவில் நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
சூரமங்கலம் மண்டலத்துக்கு உட்பட்ட என்.டி.எஸ். நகரில் 21 ஆயிரம் சதுரடி பரப்பிலும், அபிராமி கார்டனில் 9 ஆயிரம் சதுரடி பரப்பிலும், அரியாகவுண்டன்பட்டியில் 22 ஆயிரம் சதுரடி பரப்பிலும், போடிநாயக்கன்பட்டியில் 10 ஆயிரம் சதுரஅடி பரப்பிலும் நகருக்குள் வனம் அமைப்பதற்கான இடம் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டு சமன் படுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிப் பகுதியை பசுமை படுத்தும் வகையிலும், சுற்றுப்புறச் சூழலை பேணி பாதுகாத்திடும் வகையிலும், நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையிலும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட உள்ளது. ஆய்வின் போது மண்ணின் வளத்திற்கேற்ப எந்த வகையான மரங்களை நடுவது, நடப்பட்ட மரங்களை முறையாக பராமரித்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அலுவலர்களிடம் மாநகராட்சி ஆணையர் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவி ஆணையர் ராம்மோகன் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT