Published : 17 Aug 2021 03:16 AM
Last Updated : 17 Aug 2021 03:16 AM

காணி பழங்குடியினரின் வாழ்வியல் அங்காடி திறப்பு : 40 வகையான உணவுப் பொருட்கள் விற்பனை :

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில், காணி பழங்குடியினர் வாழ்வியல் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காணி மக்களால் விளைவிக்கப்படும் 40 வகையான உணவுப் பொருட்கள் அரசின் அங்காடி சான்றிதழ்கள் பெற்று இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

காரையாறு அணை அருகே மயிலார் பகுதியில் ஏராளமான காணி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கு இயற்கை முறையில் விவசாய விளை பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தாங்கள் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதில் அவர்களுக்கு பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்த நிலையில், அவற்றை நகர்ப்பகுதியில் கொண்டு வந்து விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு ஏற்பாடு செய்தார்.

பாளையங்கோட்டை மகாராஜாநகர் உழவர் சந்தையில் காணி பழங்குடி இனமக்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.

இதன் தொடர்ச்சியாக பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கு அருகே காதி கிராப்ட் கட்டிடத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு இயக்கம் சார்பில், காணி பழங்குடியினர் வாழ்வியல் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அங்காடியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

காணி பழங்குடியினர் குழுவைச் சேர்ந்தவர்கள் சுய உதவி குழுக்கள் அமைத்து இந்த வாழ்வியல் அங்காடியை ஏற்று நடத்துகின்றனர். இக்குழுவினர் மயிலார் பகுதியிலிருந்து தங்கள் இன மக்கள் விளைவிக்கும் உணவு பொருட்களை வாங்கி வந்துஇங்கு விற்பனை செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து செய்துள்ளன.

மொத்தம் 47 காணி குடும்பத்தினர் இந்த வாழ்வியல் அங்காடி திட்டத்தில் இணைந்துள்ளனர். அங்காடியை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

காணி மக்களின் வாழ்வாதாரம், கலாச்சாரம் போன்ற அனைத்தையும் நகர்ப்புறவாசிகள் தெரிந்துகொள்ள இந்த அங்காடி அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2 மாதங்களாக மாவட்ட நிர்வாகம்,ஆதிதிராவிடர் நலத்துறை உள்படஅனைத்துத் துறைகளின் முயற்சியால் அங்காடி உருவாக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில்காணி பழங்குடியினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது. அவர்களை சந்தித்து பேசிய போது, தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்தும் வசதி செய்துதர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி மகாராஜநகர் உழவர் சந்தை அருகே தனியாக இடம் ஒதுக்கி தரப்பட்டது. தற்போதுதனியாக அங்காடி திறக்கப்பட்டிருக்கிறது. இங்கு விற்பனை செய்யப்படும் 40 பொருட்களுக்கு ஆர்கானிக் சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது .மேலும் சில பொருட்களுக்கு சான்றிதழ் வாங்க முயற்சிஎடுக்கப்படும். இதுபோல், காணிஇனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் பயிற்சி, போட்டித் தேர்வுக்கான பயிற்சி என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். தற்போதைக்கு பெரிய அளவு உற்பத்தி இல்லாததால் ஏற்றுமதிக்கு வாய்ப்பில்லை .நிச்சயம் வருங்காலத்தில் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அங்காடி மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x