Published : 16 Aug 2021 03:22 AM
Last Updated : 16 Aug 2021 03:22 AM

இந்தியர்களின் தனி நபர் வருமானத்தை பெருக்க - அனைவருக்கும் உயர் கல்வி கிடைக்க வழி செய்ய வேண்டும் : விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தகவல்

இந்தியர்களின் தனிநபர் வருமானத்தை உயர்த்த அனை வருக்கும் உயர் கல்வி கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என விஐடி பல்கலைக்கழக வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.

வேலூர் விஐடி பல்கலையில் 75-வது சுதந்திர தின விழா, பாரதியார் நினைவு நூற்றாண்டு மற்றும் நேதாஜியின் 125-வது பிறந்த ஆண்டு புகைப்பட கண் காட்சி விழா என ‘முப்பெரும் விழா’ நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து, சுதந்திர தினத்தை யொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசும் போது, "இந்திய நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருவதால் விரைவில் வல்லரசாக உயர வாய்ப்புள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.05 டிரில்லியன் டாலராக உள்ளது. இதை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதை நிறைவேற்ற நாம் அனைவரும் கடின மாக உழைக்க வேண்டும்.

இந்தியர்களின் தனிநபர் வரு மானத்தை உயர்த்த வேண்டும். இது சாத்தியமாக அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தியாவில் வரி செலுத்த தகுதியுள்ள அனைவரும் தவறாமல் வரி செலுத்தி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து, நேதாஜியின் 125-வது பிறந்த ஆண்டு விழா மற்றும் மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழாவை யொட்டி தேசிய சிந்தனைக்கழகம் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் திறந்து வைத்தார்.

இதில், மத்திய மீன்வளம்,கால்நடை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் காணொலி காட்சி மூலம் புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொண்டு பேசும்போது, ‘‘ கட்டப்பொம்மன், புலித்தேவன், மருது சகோதரர்கள், தீரன் சின்ன மலை, வ.உ.சி, பாரதியார் உள்ளிட்ட பல தமிழர்கள் சுதந்திரத் துக்காக போராடியதில் பெரும் பங்கு உண்டு’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், துணை வேந்தர் டாக்டர். ராம்பாபு கொடாலி, இணை - துணை வேந்தர் டாக்டர். எஸ்.நாராயணன், பதிவாளர் டாக்டர். கே.சத்யநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x