Published : 12 Aug 2021 03:22 AM
Last Updated : 12 Aug 2021 03:22 AM

சிறுமியை திருமணம் செய்த இளைஞரிடம் விசாரணை :

சிறுமியை திருமணம் செய்த இளைஞரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் சலவன்பேட்டை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ் (21). இவர், கள்ளக்குறிச்சி யில் உள்ள உறவினரான 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டாராம்.

திருமணத்துக்குப் பிறகு சிறுமி அவரது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்நிலையில், 17 வயது சிறுமியை ஆகாஷ் திருமணம் செய்து கொண்டது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார் வந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த சமூக நலத்துறையினருக்கு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், கள்ளக்குறிச்சிக்கு சென்று அங்கு ஆகாஷ் திருமணம் செய்த 17 வயது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். இதில், ஆகாஷ் சிறுமியை திருமணம் செய்தது உண்மை என தெரியவந்தது.

இதுகுறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இதையடுத்து, ஆகாஷ் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமி மீட்கப்பட்டு வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக் கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x