Published : 11 Aug 2021 03:18 AM
Last Updated : 11 Aug 2021 03:18 AM

நாமக்கல்லில் மாலை 6 மணி வரை கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் : ஆலோசனைக் கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை

நாமக்கல் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் வணிகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் தலைமை வகித்துப் பேசினார். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அறிவித்த புதிய நேரக் கட்டுப்பாடுகள் பற்றி வணிகர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதன்படி, பால்விற்பனை, மருந்தகம் தவிர்த்து காய்கறி, மளிகை, பேக்கரி உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். ஓட்டல், தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிடவும், மாலை 5 மணிக்கு மேல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை மட்டும் வழங்கவும் அனுமதிக்கப்படுகிறது. சாலையோர தள்ளுவண்டி கடைகள் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

அனைத்து கடைகளிலும் கை சுத்திகரிப்பான் மற்றும் கிருமிநாசினி ஆகியன வாடிக்கையாளர் பயன்பாட்டிற்கு வைக்கப்பட வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடித்தும் வணிகம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே வணிக நிறுவனங்கள் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் எனவும், ஓட்டல், தேநீர் கடைகள் போலவே பேக்கரியும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை வழங்க அனுமதி அளிக்க வேண்டும், என நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் உள்பட வணிகர் சங்க நிர்வாகிகள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x