

சேலம் அருகே மது அருந்தி விட்டு இருவரை கத்தியால் குத்திய போலீஸ்காரரை வாழப்பாடி போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எம்.பெருமாபாளையத்தைச் சேர்ந்தவர் மாயவன் (27). இவர் சேலம் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் (5-ம் தேதி) இரவு மாயவன் தனது உறவினர்கள் அசோக் (25), அருண்குமாருடன் மது அருந்தியுள்ளார்.
அப்போது, மாயவனுக்கும் அசோக்குக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாயவன் கத்தியால் அசோக்கை குத்தியுள்ளார். அவரை தடுக்க வந்த அருண்குமாரையும் குத்தியுள்ளார்.
இதில் இருவரும் காயம் அடைந்த நிலையில், அங்கிருந்து மாயவன் தப்பி ஓடியுள்ளார். கத்தி குத்துப்பட்டதில், காயமடைந்த அசோக், அருண்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, போலீஸ்காரர் மாயவனை தேடி வருகின்றனர்.