Published : 07 Aug 2021 03:18 AM
Last Updated : 07 Aug 2021 03:18 AM
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட உலக சாதனை மருத்துவமனை கட்டிடம், மருத்துவமனை நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அதிகளவில் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால், அங்கு படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் ரூ.14.5 கோடி மதிப்பில், 69 ஆயிரத்து 200 சதுரடியில் மூன்று தளங்களுடன் மருத்துவமனைக் கட்டிடம் கட்டப்பட்டது. 401 படுக்கைகள் கொண்ட இந்த கட்டிடம், நவீன தொழில்நுட்பத்துடன் 45 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டது.
இதற்காக உலக அளவில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட், ஆசியா கண்ட அளவிலே ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்டு, இந்திய அளவில் இந்தியன் ரெக்கார்டு அகடமி மற்றும் தமிழக அளவில் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சாதனைக்கான சான்றிதழை வழங்கினர்.
இந்த மருத்துவமனையை நோயாளிகள் பயன்பெறும் வகையில், மருத்துவமனை கட்டிடத்தை ரோட்டரி சங்கத்தின் இண்டர்நேஷனல் தலைவர் ஷிகர் தேத்தா மற்றும் நிர்வாகிகள், அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி டீன் மணியிடம் நேற்று ஒப்படைத்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 401 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி ஹெல்த் கேர் டிரஸ்ட் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT