Published : 05 Aug 2021 03:20 AM
Last Updated : 05 Aug 2021 03:20 AM

தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு - ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் : வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை

தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட், வரும் 13-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய் யப்படுகிறது. முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

l அமைச்சரவை கூட்டத்தில் நடப் பாண்டுக்கான பட்ஜெட்டை வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

l திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

l ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வியில் வழங்கியதை போன்று, ஏனைய தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவை நடப்பு கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டம்

அமைச்சரவை கூட்டம் முடிந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடர்பாக பேரவைச் செயலர் கே.சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழக ஆளுநர், சட்டப்பேரவையின் கூட்டத்தை ஆகஸ்ட் 13-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கில் கூட்டியுள்ளார். அன்று 2021-22 நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட் பேரவைக்கு அளிக்கப்படும்’ என கூறியுள்ளார்.

பேரவையில் ஆக.13-ம் தேதி திருத்திய மற்றும் முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்தோ அல்லது மானிய கோரிக்கையின்போதோ வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும். பட்ஜெட் மீதான விவாதம், சுதந்திர தினத்துக்கு பிறகு, ஆக.16-ம் தேதி தொடங்கி 20 அல்லது 21-ம் தேதி வரை நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x