Published : 04 Aug 2021 03:21 AM
Last Updated : 04 Aug 2021 03:21 AM
ஈரோட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, அம்மா உணவகங்களில் பார்சலில் மட்டும் உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கரோனா பாதிப்பு, கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 130 என்ற நிலையில் இருந்து 180 வரை உயர்ந்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி, காவல்துறையினர் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு காந்திஜி சாலை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, சின்ன மார்க்கெட் பகுதி, சூரம்பட்டி வலசு, சூளை உட்பட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காலை, மதியம் இரண்டு வேளையும் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அம்மா உணவகங்களில் 50 சதவீதம் மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டு வந்தனர். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், நேற்று முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை அம்மா உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT