Published : 04 Aug 2021 03:22 AM
Last Updated : 04 Aug 2021 03:22 AM

மணப்பாறை அருகே வனவிலங்குகள் கடந்து செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்படுமா? : நெடுஞ்சாலை, வனத்துறை பதிலளிக்க உத்தரவு

மணப்பாறை அருகே வனவிலங்குகள் கடந்து செல்ல சுரங்கப்பாதை அமைக்கக் கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே 2.5 கிலோ மீட்டர் சாலை பச்சைமலை மற்றும் பெரியமலை வனப்பகுதியை இணைக்கிறது. பச்சைமலை, பெரியமலை வனப்பகுதியிலிருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன. மான்கள், சிறிய வகை பூனைகள், பாம்புகள், பல்லி இனங்கள் உள்பட பலவகையான மிருகங்கள் அடிபடுகின்றன.

எனவே, மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வனவிலங்குகள் செல்ல சுரங்கப்பாதை அல்லது மாற்றுப்பாதை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், மனு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை செயலர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x