Published : 04 Aug 2021 03:22 AM
Last Updated : 04 Aug 2021 03:22 AM

குழந்தைகளுக்கான கரோனா விழிப்புணர்வு பாடல் : சித்த மருத்துவரின் முயற்சிக்கு குவியும் பாராட்டு

திருநெல்வேலியில் குழந்தை களுக்கான கரோனா விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ள சித்த மருத்துவர் எஸ்.ரவீந்திரனுக்கு மருத்துவ வட்டாரங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. இந்த பாடல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி கேடிசி நகரை சேர்ந்த ரவீந்திரன், தூத்துக் குடி மாவட்டம் சிவகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆயுஷ் மருத்துவ அலுவலராக பணியாற்றுகிறார். பாளையங்கோட்டையில் தனியாக சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை நடத்தி வருகிறார். கரோனா முதல் மற்றும் 2-ம் அலையின்போது ஏராளமானோருக்கு ஆலோ சனைகளையும், சிகிச்சையும் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் கரோனா 3-வது அலை விரைவில் வரும் என்றும் அது குழந்தைகளை பெருமளவுக்கு பாதிக்கும் என்றும் சொல்லப்படும் நிலையில், பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். அப்பாடல் வாட்ஸ் அப் உட்பட சமூக வலைதளங்களில் பலராலும் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக மருத்துவ வட்டாரங்களில் இவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கை வீசம்மா கை வீசு, கடைக்கு போகலாம் கை வீசு என்ற பிரபலமான குழந்தை பாடலின் மெட்டில், இந்த விழிப்புணர்வு பாடலையும் உருவாக்கியுள்ளார். ``கை தட்டம்மா கைதட்டு, கை கழுவிட்டு கைதட்டு..! கைதட்டமா கைதட்டு மாஸ்க் போட்டு கைதட்டு..! கைதட்டம்மா கைதட்டு சமூக இடைவெளிவிட்டு கைதட்டு..!” இவ்வாறு இந்த பாடல் வரிகள் நீள்கின்றன.

மருத்துவர் ரவீந்திரன் கூறும்போது, கரோனா 3-வது அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. “கரோனா விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. கரோனா குறித்து குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பாடலை உருவாக்கியுள்ளேன். இந்த பாடலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தலாம், குழந்தைகளுக்கு எளிதில் சொல்லிக்கொடுக்கலாம். தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள், இப்பாடலை தங்கள் மாணவ, மாணவியருக்கு சொல்லிக்கொடுக்கலாம்.

குழந்தைகளை கரோனா தாக்காமல் இருக்க ஆடாதொடை மணப்பாகு, தாளிசாதி சூரணம், தாளிசாதி வடகம், கண்டகாரி மாத்திரை, சிறு குழந்தைகளுக்கு உரை மாத்திரை, ஆடா தொடை குடிநீர் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை கொடுக்கலாம்.

இதனால் குழந்தைகளின் நுரையீரலை தொற்று பாதிக்காது. இந்த சித்த மருந்துகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x