Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM

கரோனா பரவல் காரணமாக களையிழந்த ஆடிப்பெருக்கு விழா :

கரோனா பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதால், திருப்பத்தூர் மாவட்டத்தில் பூட்டிய கோயில் களின் முன்பு நின்று பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

ஆடி மாதம் 18-ம் நாள் ‘ஆடிப் பெருக்கு’ என அழைக்கப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளில் தொடங் கப்படும் பணிகள் சிறப்பு வாய்ந் ததாக அமையும் என்பது தமிழர் களின் நம்பிக்கையாக உள்ளது. ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி யில் நீராடி, மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம், சமர்ப்பித்து இறைவனை வழிபடுவது வழக்கம். காவிரியில் நீராடினால் அனைத்து ஐஸ்வர்யமும் பெருகும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இந்நாளில் புதுமண தம்பதிகள் ஆற்று நீரில் நீராடி, புதுமணப்பெண் புதிய மஞ்சள் கயிற்றை மாற்றிக்கொள்வார். அதேபோல, விவசாயிகளும் ஆடிப்பெருக்கு நாளில் தங்களது உழவுப் பணிகளை தொடங்குவார்கள்.

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை கூடுதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆடி மாதம் என்பதால் கோயில்களில் வழிபாடு நடத்த பக்தர்கள் அதிக அளவில் திரண்டால் கரோனா தொற்று அதிகரிக்கும் என்பதால் ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை உள்ளிட்ட விழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பிரசித்திப் பெற்ற அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஆகம விதிப்படி கோயில் ஊழியர்கள் மட்டுமே சிறப்பு பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு போன்ற விழாக்களையொட்டி கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண் டாடப்படும். தற்போது, கரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிரசித்திப்பெற்ற கோயில்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால், ஆடிப்பெருக்கு நாளில் விசேஷமாக காணப்படும் வாணியம்பாடி கொடையாஞ்சி பாலாற்றங்கரையில் உள்ள பாலமுருகன் கோயில், திருப் பத்தூர் அடுத்த பசிலிக்குட்டை முருகன் கோயில், ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள சுப்பிரமணியசுவாமி முருகன் கோயில், ஆம்பூர் கைலாசகிரி நாதர் உள்ளிட்ட பிரசித்திப்பெற்ற கோயில்கள் நேற்று களையிழந்து காணப்பட்டன.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பூட்டிய கோயில்கள் முன்பாக வெளியே நின்று வழிபட்டனர். ஆண்டியப்பனூர் அணைப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆற்று நீரில் நீராடி மகிழ்வார்கள். இந்த ஆண்டு அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆண்டியப் பனூர் அணைப் பகுதியில் பக்தர் கள் வர முடியாத படி அங்கு காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x