

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்து கோயில்களில் மட்டும் திட்டமிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், ஆடி மாதத்தில் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் செய்வதற்கு அனுமதி அளிக்க வலியுறுத்தியும், இந்து முன்னணியினர் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆடி அமாவாசையன்று (9-ம் தேதி) தாமிரபரணி ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில், அதன் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் ஏராளமானோர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். பின்னர், கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.
இதுதொடர்பாக, வி.பி. ஜெயக்குமார் கூறும்போது, ``திருநெல்வேலி மாவட்டத்தில் மற்ற மதத்தினர் வழக்கம்போல் திருவிழாக்களை நடத்துகின்றனர். ஆனால், இந்து கோயில்களில் மட்டும் பக்தர்கள் வழிபாடு நடத்த அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். ஆடி அமாவாசை தினத்தில் நீர்நிலைகளில் தர்ப்பணம் நடத்த மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்துக்கள் தர்ப்பணம் கொடுக்க அனுமதி அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.