Published : 03 Aug 2021 03:16 AM
Last Updated : 03 Aug 2021 03:16 AM

கரோனா 3-வது அலையை சமாளிக்க தயார் நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் :

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா 3-வது அலையைச் சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயார் நிலையில் இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்தார்.

கரோனா 3-ம் அலை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எல்இடி திரையுடன் கூடிய விழிப்புணர்வு வாகனத்தை, மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார். அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பாதிப்புபெரிய அளவில் கண்டறியபடவில்லை. 3-ம் அலையை கட்டுப்படுத்தும் வகையில் ரயில் நிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகளில் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரள பயணிகளுக்கு தற்போது தொற்று அறிகுறி அடிப்படையில் பரிசோதனை செய்கிறோம். தேவைப்பட்டால் 100 சதவீதம் பரிசோதனை நடத்த தயாராக இருக்கிறோம்.

மாவட்டத்தில் 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் 3,000-க்கும் அதிகமான கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 3.57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவிட் கேர் மையங்கள் தயார்நிலையில் உள்ளன. 3-வது அலையைச் சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். மாவட்டத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று ஆட்சியர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x