

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான பெரும்பாலான சாலைகளில் விளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை பொருத்துவதற்கான உரிய அனுமதி ஆணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள விளம்பரப்பலகைகளுக்கு உரிய அனுமதியை பெற்ற சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் அனுமதிக்கான உத்தரவு நகலை உரிய ஆவணங்களுடன் ஒரு வார காலத்துக்குள் (06.08.2021) மாநகராட்சி மைய அலுவலக திட்டப்பிரிவில் ஒப்படைக்க வேண்டும்.
எவ்வித அனுமதியும் பெறப்படாமல் தன்னிச்சையாக சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அனைத்தும் எவ்வித முன்னறிவிப்புமின்றி உடனடியாக அப்புறப்படுத்தப் படுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய மேல்நடவடிக்கை தொடரப்படும்.
மேலும், சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் பொருட்கள் எக்காரணத்தை முன்னிட்டும் திரும்ப வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார்.