Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM
சேலம் / ஈரோடு: மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு சார்பில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். தலைவர் சின்னதம்பி, துணைத் தலைவர்கள் பொன்னுசாமி, பெரியதம்பி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகள் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன் பேசினார். மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். யார்கோளில் அனுமதியின்றி கர்நாடக அரசு கட்டியுள்ள தடுப்பணையை அகற்ற வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் துளசிமணி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மேற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT