Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

பவானிசாகர் அணையிலிருந்து 6000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் : கொடிவேரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்யும் தொடர்மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று முன்தினம் மாலை அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அணையில் 105 அடிவரை நீரினைத் தேக்கி வைக்க முடியும் என்றாலும், அணையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, நேற்று முன்தினம் மாலை முதல் உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.

பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால், பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.போலீஸார், வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை, பொதுப்பணித்துறையினர் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

இதனால், சுற்றுலா பயணிகளுக்கும், பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.

நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 100 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 6875 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்துக்கு 800 கனஅடியும், ஆற்றில் உபரிநீராக 5850 கனஅடி என மொத்தம் விநாடிக்கு 6650 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 28.72 டிஎம்சியாக உள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x