Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

வாணியம்பாடி அருகே நள்ளிரவில் சினிமா பாணியில் - சூதாட்டத்தில் வென்ற பணத்தை கொள்ளையடித்த கும்பல் : காவல் ஆய்வாளர், தனிப்பிரிவு காவலர் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம்

வாணியம்பாடி அருகே நள்ளிரவில் சினிமா பாணியில் மர்ம கும்பலால் சூதாட்டத்தில் வென்ற ரூ.22 லட்சம் பணத்தில் ரூ.11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, பேரணாம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர், தனிப்பிரிவு காவலர் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (45). இவர், அதே பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் ஆடும் பழக்கம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகேயுள்ள மொரசபல்லி கிராமத்தில் முறைகேடாக இயங்கி வரும் சூதாட்ட கிளப்பில் பல லட்சங்களை இழந்துள்ளார்.

இழந்த பணத்தை மீட்பதற்காக சுமார் ரூ.5 லட்சம் பணத்துடன் ஞானசேகரன், அவரது நண்பர்களான பாலாஜி, சிவக்குமார் ஆகியோருடன் சேர்ந்து மீண்டும் சூதாட்ட கிளப்புக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளனர். பின்னர், சூதாட்டத்தில் வென்ற ரூ.22 லட்சம் பணத்துடன், நண்பர்களுடன் மீண்டும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். ஞானசேகரன் பணத்தை இரண்டு பையில் தலா ரூ.11 லட்சமாக தனித்தனியாக வைத்து காரில் எடுத்துச் சென்றார்.

வாணியம்பாடி அருகேயுள்ள வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது ஞானசேகரனின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, சினிமா பாணியில் காரின் குறுக்கே வந்து மற்றொரு கார் நின்றது. திடீரென காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், ஞானசேகரன் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். சுதாரித்துக் கொண்ட ஞானசேகரன் தரப்பினரும் அவர்களை திருப்பி தாக்கினர். இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர் ஒருவர் கத்தியால் பாலாஜியின் கையில் வைத்திருந்த வெட்டு காயத்தை ஏற்படுத்திவிட்டு, ஒரு பையில் இருந்த 11 லட்சத்துடன் தப்பியோடினர்.

இந்த தகவலறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, வாணியம்பாடி டிஎஸ்பி பழனி செல்வம் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஞானசேகரனிடம் நடத்திய விசாரணையில், சூதாட்டத்தில் வென்ற பணத்தை எடுத்து வரும்போது மர்ம கும்பல் தாக்கிவிட்டு ரூ.11 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தகவலை கூறினார்.

பின்னர், மர்ம கும்பல் பயன்படுத்திய காரை சோதனையிட்டதில், ஒரு ஆதார் அடையாள அட்டை, ஒரு பான் அட்டை மற்றும் காவலர் தொப்பி ஒன்றும் கண்டெக்கப்பட்டது. அந்த காரின் பதிவெண் கர்நாடக மாநிலமாக இருந்தாலும், அதை பிரித்துப் பார்த்தபோது தமிழக பதிவெண் கொண்டதாக இருந்தது. பின்னர், ஞானசேகரன் வசம் இருந்த ரூ.11 லட்சம் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தப்பியோடிய கும்பலை பிடிக்க டிஎஸ்பி பழனிசெல்வம் மற்றும் 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் என தனித்தனியாக நான்கு தனிப்படைகளை அமைத்து காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழிப்பறி சம்பவத்தில் சூதாட்ட கிளப் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகேயுள்ள மொரசபல்லி கிராமத்தில் இயங்கியதாக தெரியவந்தது. இந்த தகவலை அடுத்து பேரணாம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன், தனிப்பிரிவு காவலர் செல்வராஜ் ஆகியோரை வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x