மிரட்டல் வழக்கில் கைதான -  சாமியார் உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு  :

மிரட்டல் வழக்கில் கைதான - சாமியார் உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு :

Published on

டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட திருச்சி அல்லித்துறை சாமியார் உட்பட 3 பேரும் லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (32). ‘தேஜஸ் சுவாமிகள்’ என்ற பெயரில் திருச்சி அல்லித்துறை வன்னியம்மன் கோயில் பகுதியில் ஜாதகம் பார்த்து வந்த இவர், குறுகிய காலத்தில் பிரபலமானார்.

இதனிடையே, ரவுடிகள் என்கவுன்ட்டர் பட்டியல் தொடர்பாகவும், முக்கிய பிரமுகர் வீட்டுக்கு சைரன் காரில் சென்றது தொடர்பாகவும் வழக்கறிஞர் கார்த்திக் என்பவரிடம் சாமியார் பேசுவது போன்ற ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில், திருச்சி பொன்மலை பகுதி டாஸ்மாக் மேற்பார்வையாளர் சுந்தர்ராஜ் என்பவரை மிரட்டிய வழக்கில், சாமியார், வழக்கறிஞர் கார்த்திக் மற்றும் ரவுடி கொட்டப்பட்டு ஜெய் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்து வந்தனர். பின்னர், 3 பேரும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 5-ல் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் ஆக.2-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, 3 பேரையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் லால்குடி கிளைச் சிறைக்குக் கொண்டு சென்று அடைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in