துறையூர் கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் : அமைச்சரிடம் பட்டதாரி ஆசிரியர் கழகம் மனு

துறையூர் கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் :  அமைச்சரிடம் பட்டதாரி ஆசிரியர் கழகம் மனு
Updated on
1 min read

துறையூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் வா.கோபிநாதன், மாவட்டத் தலைவர் வே.குமார், மாவட்டச் செயலாளர் எம்.கலையரசன் உள்ளிட்டோர் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் திருச்சியில் நேற்று முன்தினம் அளித்த மனு:

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். பள்ளி துணை ஆய்வாளர் பதவி இடங்களை தற்போது நடைமுறையில் உள்ளவாறு பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும். துறையூரைத் தலைமையகமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும். மணப்பாறை கல்வி மாவட்டத்தில் தற்போது உள்ள மணிகண்டம் ஒன்றியத்தை, திருச்சி கல்வி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும். மணப்பாறை கல்வி மாவட்டத்துக்கு புதிய விடைத்தாள் திருத்தும் மையத்தை ஏற்படுத்த வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வித் துறை கட்டிடம் கட்ட வேண்டும். உயர் கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆசிரியர் வீட்டு வசதிக் கழகம் அமைக்க வேண்டும். ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in