பெரம்பலூர் அருகே ஒருதலை காதலால் விபரீதம் - இளம்பெண்ணை கொன்று இளைஞர் தற்கொலை :

பெரம்பலூர் அருகே ஒருதலை காதலால் விபரீதம் -  இளம்பெண்ணை கொன்று இளைஞர் தற்கொலை  :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் தனலட்சுமி(22). இவர், கொளப்பாடி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது, அந்த வீட்டுக்கு எதிர்வீட்டில் வசித்துவந்த அண்ணாதுரை மகன் அருண்பாண்டியன்(30) என்பவர், தனலட்சுமியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனலட்சுமியை திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறி, அவரது வீட்டில் அருண்பாண்டியன் பெண் கேட்டுள்ளார். ஆனால், தனலட்சுமியின் பெற்றோர் பெண் தர மறுத்ததால், அருண்பாண்டியன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கொளப்பாடி கிராமத்தில் உள்ள கோயிலில் நடைபெறும் பால்குட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தனலட்சுமி தனது உறவினரான ஒரு இளைஞருடன் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது, சின்ன வெண்மணி கிராமம் அருகே இருசக்கர வாகனத்தை வழிமறித்த அருண்பாண்டியன், சுளுக்கியால் தனலட்சுமியை குத்திவிட்டு தப்பினார். இதில் பலத்த காயமடைந்த தனலட்சுமி, அரியலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே, அருண்பாண்டியன், சின்ன வெண்மணி கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து குன்னம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in