Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM

விளம்பர பேனர் வைப்பதற்கான விதிமுறைகள் என்ன? : ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை விளக்கம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காவல்துறை சார்பில் நடைபெற்றது. திருமண மண்டப உரிமையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்கள், சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் காவல் ஆய்வாளர் விஜயகுமார் பேசும்போது, “நீதிமன்ற உத்தரவின்படி பேனர் வைக்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன. பேனர் வைப்பவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறையிடம் இருந்து தடையில்லாச் சான்று பெற்று, இரண்டு நாட்களுக்கு முன்னதாக காவல்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதில், அனுமதி கட்டணம் செலுத்தியதற்கான சலான் மற்றும் வைப்புத்தொகை ஆகியவற்றை இணைத்திருக்க வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட அளவில் மட்டுமே பேனர் வைக்க வேண்டும். சாலை தடுப்புச் சுவரில் தட்டிகள் வைக்க அனுமதி இல்லை. சாலையோரத்தில் வைக்கப்படும் பேனர்கள், பாதசாரிகளுக்கு இடையூறின்றி இருக்க வேண்டும். கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், தெரு சந்திப்புகள் ஆகியவற்றிலி ருந்து 100 மீட்டர் தூரம் வரை பேனர்கள் வைக்க அனுமதி இல்லை.

விதிகளை மீறுவோருக்கு 5,000 ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். பேனர்களில் அச்சிட்ட அச்சக உரிமையாளர் பெயர் குறிப்பிட வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x