Published : 22 Jul 2021 03:15 AM
Last Updated : 22 Jul 2021 03:15 AM

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு; வேலூரில் சாலை மறியல் :

வேலூரில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர் வசந்தபுரம் பர்மா காலனியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் கடந்த வாரம் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.

இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, செல்போன் டவர் அமைக்கும் பணிகள் நிறுத்தப் பட்டன. இந்நிலையில், மீண்டும் நேற்று காலை செல்போன் டவர் அமைக்க ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கஸ்பா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பொதுமக்கள் கூறும்போது, ‘‘பர்மா காலனியில் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என ஏராளமானோர் வசித்து வருகின்றனர். செல்போன் டவர் அமைப்பதால் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல கால்நடைகளுக்கும், பறவை களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, குடியிருப்புப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கக் கூடாது என்பதை வலிறுத்தி மறியலில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.

அப்போது, பொது மக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. செல்போன் நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி யளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொது மக்களின் மறியலால் கஸ்பா - வேலூர் பிரதான சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x