

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊர் மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த 2017- 2018-ம் ஆண்டு சுகாதாரமான கழிப்பிட வசதி, மின்னணு கல்வி, படைப்பாற்றல் திறன் போன்றவற்றை கருத்தில் கொண்டு சிறந்த பள்ளிக்கான விருதை சேலம் மாவட்ட நிர்வாகம் வழங்கியது. இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 8 உதவி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒன்றாவது முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 425 ஆக இருந்தது. நடப்பு ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கை 620 ஆக உயர்ந்துள்ளது.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை ஊர் மக்கள் பாராட்டி விழா நடத்தினர்.
விழாவில், ஆசிரியர்களை பாராட்டி ஊரின் முக்கிய பிரமுகர்கள் பேசினர்.மேலும், 600-வதாக சேர்ந்த மாணவரை கேக் வெட்ட வைத்து மகிழ்ந்தனர்.