Published : 18 Jul 2021 03:16 AM
Last Updated : 18 Jul 2021 03:16 AM

மேகேதாட்டுவில் அணை கட்டுவதைக் கண்டித்து - விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

தஞ்சாவூர் / திருவாரூர்/ அரியலூர்/ கரூர்/ புதுக்கோட்டை

மேகேதாட்டுவில் கர்நாடகா அரசு அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேகேதாட்டுவில் சட்டவிரோதமாக அணை கட்டி காவிரி டெல்டாவை பாலைவனமாக்க முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசையும், அதற்கு துணைபோகும் மத்திய அரசையும் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளரும், எம்எல்ஏவுமான எம்.சின்னதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய சங்கப் பிரமுகர் ஜி.பவுன்ராஜ் தலைமை வகித்தார்.

விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.கலைமணி, ஒன்றியத் தலைவர் வி.ராஜாங்கம், செயலாளர் எஸ்.சேகர், ஒன்றிய கவுன்சிலர் வசந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மகாராசன் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர்கள் சங்கபாலன், இதயத்துல்லா, ராமச்சந்திரன், கலியமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பத்மாவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, திருமானூர் பேருந்து நிலையம், தா.பழூர் கடைவீதி ஆகிய இடங்களிலும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஓ.கே.கண்ணதாசன், விவசாய சங்க மாவட்டத் தலைர் ஏ.நாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்க நிர்வாகிகள் பி.ராமமூர்த்தி, பி.சங்கரநாராயணன், ஜி.ராஜா, பி.ரங்கசாமி, கே.வி.கணேசன், பி.வேல்முருகன், ம.குணசேகரன், ஆர்.வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் தலைமை வகித்தார்.

இதில், நிர்வாகிகள் கே.பி.பெருமாள், கே.சண்முகம், எஸ்.பொன்னுச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x